செய்திகள்
தீபாவளி பண்டிகை பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
தீபாவளி பண்டிகை முடியும் வரை கடை வீதியில் ஒரு வழி பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் கடை வீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலதண்டாயுதபாணிசுவாமி கோவில் முதல் அண்ணா சிலை வரை பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இரண்டு புறமும் இரும்பு தடுப்பு மூலம் அடைக்கப்பட்டு இருந்தது.
பொதுமக்கள் கடை வீதியில் நடந்து சென்று பொருட்கள் வாங்கும் வகையில் பாதை வசதி செய்யப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பல்லடம் வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தா செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் விமல் பழனிசாமி, விஜயகுமார், பானு பழனிசாமி ஆகியோர் பல்லடம் டி.எஸ்.பி.வெற்றிசெல்வன், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் ஒரு வழிப்பாதையாக மாற்ற கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தீபாவளி பண்டிகை முடியும் வரை கடை வீதியில் ஒரு வழி பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை வேன், லாரி உள்ளிட்ட சரக்கு வாகன போக்குவரத்திற்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். '
வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு வழிபாதை போக்குவரத்திற்கு அனுமதி வழங்கிய போலீஸ் அதிகாரிகளுக்கு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.