குடியாத்தம் நகராட்சியில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல்
குடியாத்தம்:
குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உள்ள கடைகளில் வாடகை பாக்கி ஒரு கோடியே 50 லட்சத்திற்கும் மேலாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாடகை பாக்கியை வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இருப்பினும் நகராட்சி கடைகளில் வாடகைக்கு உள்ளவர்கள் சிலர் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்குமாறு வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பி.குபேந்திரன் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சிசில் தாமஸ் மேற்பார்வையில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் மேலாளர் டி.கே. சுகந்தி, வருவாய் ஆய்வாளர் சந்திரமோகன், நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன், உதவியாளர் யுவராஜ் உள்ளிட்டோர் கொண்ட நகராட்சி அதிகாரிகள் குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட அண்ணா தெரு, அர்ஜுன முதலி தெரு, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாடகை பாக்கி வைத்திருந்த 12 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
நகராட்சி அதிகாரிகள் வாடகை பாக்கி வைத்திருக்கும் கடைகளுக்கு சீல் வைக்க வரும் தகவல் அறிந்ததும் சில கடைக்காரர்கள் தங்களின் வாடகை பாக்கியை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர்.