செய்திகள்
சீர்காழி பகுதியில் சம்பா நடவு பணி தீவிரம் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
சீர்காழி பகுதியில் சம்பா நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கற்கோவில், கதிராமங்கலம், எடக்குடி வடபாதி, காரைமேடு, சட்டநாதபுரம், தாடாளன் கோவில், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, கடவாசல், வடகால், விளந்திட சமுத்திரம், அத்தியூர், அகனி, கொண்டல், வள்ளுவக்குடி, எலத்தூர், மருதங்குடி, புங்கனூர், திருப்புன்கூர், ஆதமங்கலம், பெருமங்கலம், தொழுதூர், மருவத்தூர், நயினார் தோப்பு, நல்லான் சாவடி, காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது பாசன நீர் மற்றும் தொடர் மழையால் விவசாயிகள் சம்பா நடவு பணி செய்வதற்காக நிலங்களை உழுது தயார் செய்து, சமப்படுத்தி தற்போது ஆட்களை கொண்டு சம்பா நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் எந்திரம் மூலம் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் முன்கூட்டியே சம்பா நடவு பணி மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு கூட்டுறவு மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.