செய்திகள்
கொலை

சென்னிமலை அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை

Published On 2021-09-26 10:08 GMT   |   Update On 2021-09-26 10:08 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் மேம்பாலத்தின் கீழ் நேற்று இரவு ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. திடீரென அந்த கும்பலில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை அந்தக் கும்பலை சேர்ந்த மற்றவர்கள் கல்லால் தாக்கினர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். ஆனால், போலீசார் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்தக்காயங்களுடன் கிடந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. எந்த காரணத்துக்காக அந்த வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார் எனவும் தெரியவில்லை.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாலிபரை கொலை செய்த நபர்கள் குறித்து சம்பவம் நடந்த சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர். வாலிபர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News