செங்கம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் படுகொலை
செங்கம்:
செங்கம் அடுத்த புதுப்பாளையம் வீரானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது24) சமையல் மாஸ்டராக வெளியூரில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான வீரானந்தல் கிராமத்திற்கு வந்தார்.
நேற்று முத்தனூர் சாலையில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வெங்கடேசன் சென்று கொண்டு இருந்தார். அப்போது உண்ணாமலை பாளையம் அருகே வெங்கடேசனை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த புதுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட புதுப்பாளையம் ஜி.என்பாளையம் பகுதியை சேர்ந்த மதுசூதனன் (33), சுரேஷ் (30), வல்லரசு (26), ஏழுமலை (24) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வசந்த் மற்றும் வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து புதுப்பாளையம் நகரில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.