செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களுடன் கைதான வடமாநில வாலிபர்களை படத்தில் காணலாம்.

ரெயிலில் குட்கா கடத்தல் - திருப்பூரில் வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது

Published On 2021-09-18 11:17 GMT   |   Update On 2021-09-18 11:17 GMT
தன்பாத்தில் இருந்து திருப்பூருக்கு ரெயிலில் வந்திறங்கிய வடமாநில தொழிலாளர்களின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் தினந்தோறும் ரெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளனர். 

கடந்த சில நாட்களாக வடமாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு வரும் தொழிலாளர்கள் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி கொண்டு வந்து திருப்பூரில் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ரெயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்தநிலையில் ரெயில்வே சூப்பிரண்டு இளங்கோ உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் இன்று தன்பாத்தில் இருந்து திருப்பூருக்கு ரெயிலில் வந்திறங்கிய வடமாநில தொழிலாளர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். 

அப்போது 3 பேரின் உடைமைகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த கிஷோர் பாய், பலராம் ஷாகு (வயது 23), உத்திரபிரதேசத்தை சேர்ந்த அஜஸ் குமார் (22) என்பதும், பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்த 3 பேரும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை சக ஊழியர்களுக்கு அதிகமான விலையில் விற்பதற்காக கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. 

தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவர்களிடமிருந்த 15 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News