செய்திகள்
கோப்புபடம்

ஆடுகளை நாய் கடித்ததாக தகராறு: தொழிலாளி கொலை - 4 பேர் கைது

Published On 2021-09-18 07:00 GMT   |   Update On 2021-09-18 07:00 GMT
நெல்லை அருகே ஆடுகளை நாய் கடித்ததாக ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள கண்டிகைபேரி புது காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது55), தொழிலாளி. இவரது மனைவி குருவம்மாள். அதே பகுதியில் வசித்து வருபவர் முத்து(55).

கடந்த 10-ந்தேதி மாரியப்பன் வளர்த்து வந்த நாய் முத்துவின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளை கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் முத்து மற்றும் அவரது மகன்கள் மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 14-ந்தேதி மாரியப்பன் அவரது வீட்டில் இருந்தபோது முத்து மற்றும் அவரது மகன்கள் மாரியப்பன்(21), முத்துமணி(19), அவர்களது உறவினரான 16 வயது சிறுவன் ஆகியோர் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றவே 4 பேரும் சேர்ந்து மாரியப்பனை கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குருவம்மாள் அளித்த புகாரின்பேரில் மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மாரியப்பனை கொலை செய்த முத்து மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் சிறுவன் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள இளஞ்சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News