செய்திகள்
அமைச்சர் பொன்முடி

கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகம்- அமைச்சர் தகவல்

Published On 2021-09-01 08:57 IST   |   Update On 2021-09-01 08:57:00 IST
என்ஜினீயரிங் கல்லூரியை பொறுத்தவரை அதனை அமைக்க கட்டிடம், விடுதிகள், உபகரணங்கள் வாங்கும் செலவு என ரூ.96 கோடி ஆகும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை:

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், உறுப்பினர் மா.செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி) பேசும்போது, ‘மாணவ, மாணவிகள் நலன் கருதி கள்ளக்குறிச்சியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அவசியமாக அமைக்க வேண்டும்' என்றார். இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்து பேசியதாவது:-

என்ஜினீயரிங் கல்லூரியை பொறுத்தவரை அதனை அமைக்க கட்டிடம், விடுதிகள், உபகரணங்கள் வாங்கும் செலவு என ரூ.96 கோடி ஆகும். ஆண்டு ஊதியமாக ரூ.17.18 கோடி செலவாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1,380 மாணவர்களை சேர்க்கலாம். ஆனால், 2020-2021-ல் 462 பேர் தான் சேர்ந்து இருக்கிறார்கள். காலி இடமே அதிகமாக இருக்கிறது.

இன்றைக்கு என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டிருக்கிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தான் மாணவர் சேர்க்கை அதிகமாகி கொண்டிருக்கிறது. நிதிநிலை பற்றி சொல்லியிருக்கிறேன். இப்போதைக்கு என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. உறுப்பினர் மனோஜ்பாண்டியன் (ஆலங்குளம்), கடந்த ஆண்டு ஆலங்குளம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. நானும் இடத்தை தேர்வு செய்து கொடுத்து இருக்கிறேன். இந்தாண்டு பணிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்று துணை கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் பொன்முடி, ‘கடந்த காலங்களில் 13 கலைக்கல்லூரிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் மொத்தம் 4 கல்லூரிகளுக்கு தான் இடம் வாங்கியிருக்கிறார்கள். ஆலங்குளம் கல்லூரிக்காக ரூ.11.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.

Similar News