செய்திகள்
ஆரணி ரோடு ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
ஆரணி ரோடு ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணிரோடு ரெயில் நிலைய பகுதி தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. தகவலை கேள்விப்பட்டு களம்பூர் நால்வர் தெருவைச் சேர்ந்த சாவித்திரி என்பவர் சென்று பார்த்தார். ரெயிலில் அடிபட்டு பலியானவர் தனது கணவர் ராஜாராமன் (வயது 50) என்பதை உறுதி செய்து கதறினார்.
நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து காட்பாடியை நோக்கி சென்ற சரக்கு ரெயிலில் ராஜாராமன் அடிபட்டு தலை நசுங்கி பலியானதாக தெரிய வருகிறது. காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
களம்பூர் நால்வர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான அவர் கடந்த 10 நாட்களாக வீட்டுக்கு வராமல் சுற்றித்திரிந்தார். அவரை, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. ஆரணிரோடு ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பலியாகியது தெரிய வந்தது.