செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
கிருமாம்பாக்கம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கால் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள இல்லத்தில் மர்ம நபர்கள் புகுந்து லேப்டாப், டி.வி., செட்டாப் பாக்ஸ் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
நேற்று காலை பொருட்கள் காணாமல் போனதை கண்டு அங்குள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குழந்தைகள் மையத்தின் இயக்குனர் புருசரத்சிங் (50) கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், ஏட்டு லூர்துநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.