செய்திகள்
போராட்டம்

மயிலாடுதுறையில் தரமற்ற அரிசி வழங்குவதாக கூறி ரே‌ஷன் கடையை முற்றுகையிட்டு மக்கள் மறியல்

Published On 2021-08-22 16:10 IST   |   Update On 2021-08-22 16:10:00 IST
ரே‌ஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரே‌ஷன் கடை அதிகாரி கடையை பூட்டியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அடுத்து காளி ஊராட்சியில் ரே‌ஷன் கடையில் பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ரே‌ஷன் கடைகளிலிருந்து நல்ல அரிசியை இருசக்கர வாகனத்தில் மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு கிராமம் கிராமமாக கள்ள சந்தை மார்க்கெட்டில் விற்பதாகவும், தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காளி ஊராட்சி ரே‌ஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரே‌ஷன் கடை அதிகாரி கடையை பூட்டியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் உடன்படாததால் பல மணி நேரத்திற்கு மேலாக காளி - மணல்மேடு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் மேல் அதிகாரிகளிடம் பேசி தரமுள்ள அரசி வழங்குவதற்கான நடவடிக்கையும், கள்ள சந்தையில் விற்கப்படும் அரிசியை தடுக்க முயற்சி செய்வதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 100 நாள் வேலை முறைகேடுகளை கண்டித்தும், ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதை கண்டித்தும் அடுத்தடுத்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளதால் மாவட்ட கலெக்டர், காளி ஊராட்சியை தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மயிலாடுதுறை அடுத்து காளி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை தராமல் மாதத்தில் ஒரு வாரம் மட்டும் பணி கொடுத்துவிட்டு மீதம் 3 வாரங்களில் கொடுக்காமல் மறுத்து வருவதாக வேலை செய்யும் மக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக அதிகாரியிடம் மக்கள் கேட்டபோது 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் இப்பொழுது வேலை இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் ஒரு மாத காலமாக வேலை நடைபெற்றததாக அனைவரின் பெயரில் பில் போடப்பட்டு பணம் எடுத்ததாக கூறி பொதுமக்கள் காளி ஊராட்சி, ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். வேலை தர நடவடிக்கை எடுப்பதாக உத்தரவு அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 100 நாள் வேலையில் ஊதியம் வழங்குவதில் முறைகேடு ஏற்பட்டதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News