செய்திகள்
மயிலாடுதுறையில் மருத்துவமனை மேலாளரிடம் பணம் திருடிய வாலிபர் கைது
மயிலாடுதுறையில் மருத்துவமனை மேலாளரிடம் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை பழைய ஸ்டேட் பாங்க் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவில் மருத்துவமனை வாசல் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. அன்றைய தினம் பகல் நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த அந்த மர்ம நபர் மருத்துவமனை மேலாளர், வைத்தீஸ்வரன் கோவில் வடக்கு வீதியை சேர்ந்த நவீன்குமார் (வயது 26) என்பவரின் சட்டைப்பையில் இருந்து ரூ.200-ஐ திருடி சென்றுள்ளார். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக நவீன்குமார் கொடுத்த புகாரின்பேரில் கண்காணிப்பு கேமராக்களில் இருந்த பதிவுகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயற்சி செய்த மர்ம நபரும், மருத்துவமனை மேலாளரிடம் ரூ.200-ஐ திருடி சென்ற நபரும் ஒரே நபர்தான் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக மயிலாடுதுறை திருமஞ்சன வீதி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த முகமது நயினா மகன் முகமது மைதீன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.