செய்திகள்
வள்ளுவக்குடி- ஆதமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
குண்டும், குழியுமான வள்ளுவக்குடி-ஆதமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே வள்ளுவக்குடி, பத்தக்குடி, கொட்டாமேடு, ஆதமங்கலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக வள்ளுவக்குடி முதல் ஆதமங்கலம் வரை உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேற்கண்ட கிராமங்களுக்கு அவசர காலத்திற்கு ஆட்டோ, கார், வேன், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வர மறுப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான வள்ளுவக்குடி-ஆதமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.