செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - புதிதாக 92 பேருக்கு பாதிப்பு உறுதி

Published On 2021-07-09 17:37 IST   |   Update On 2021-07-09 17:37:00 IST
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 92 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 58 ஆயிரத்து 577 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 92 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னை, தஞ்சை ஆகிய இடங்களில் இருந்து கம்மாபுரம், கீரப்பாளையம், பண்ருட்டி வந்த 3 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஒருவருக்கும் நோய்த்தொற்று உறுதியானது.

இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 24 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 64 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.நேற்று முன்தினம் வரை 56 ஆயிரத்து 868 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 76 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 847 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனையிலும், 99 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இது வரை 776 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 3 பேர் பலியானார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூரை சேர்ந்த 80 வயது மூதாட்டி, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 60 வயது முதியவர், புவனகிரியை சேர்ந்த 50 வயது ஆண் ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்று பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 பேரும் அடுத்தடுத்து பலியானார்கள். மாவட்டத்தில் நேற்று கட்டுப்பாட்டு பகுதி 40 ஆக குறைந்தது. இதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Similar News