செய்திகள்
சீர்காழி அருகே மரத்தின் மீது சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி
சீர்காழி அருகே மரத்தின் மீது சரக்கு வேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் காயம் அடைந்தனர்.
சீர்காழி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மணல்மேடு கிராமம் முதல் சட்டநாதபுரம் வரை கட்சி கொடிகள், விளம்பர பலகைகள் வைப்பதற்கு சேலத்தை சேர்ந்தவர்களிடம் தி.மு.க.வினர் ஒப்பந்தம் செய்து இருந்தனர். அதன்படி சேலத்தை சேர்ந்த 4 பேர் நேற்று காலை மணல்மேடு கிராமத்தில் இருந்து சட்டநாதபுரம் வரை தி.மு.க. கொடிகள் மற்றும் தோரணங்களை கட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை முடித்துக்கொண்டு சரக்கு வேனில் மணல்மேட்டில் இருந்து சீர்காழி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
சீர்காழி சூரக்காடு பகுதியில் வந்தபோது சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சேலம் மாவட்டம் வீரபாண்டி தாலுகா சின்னப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் (வயது 55) படுகாயம் அடைந்தார். மேலும் வேனில் அவருடன் பயணம் செய்த 3 பேர் லேசான காயம் அடைந்தனர்.
இவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.