செய்திகள்
கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி - மேலும் 89 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலியானார்கள். மேலும் 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 58 ஆயிரத்து 505 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 56 ஆயிரத்து 800 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்த நிலையில் 776 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதிதாக 89 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் கோயம்புத்தூரில் இருந்து கடலூர் வந்த ஒருவர், விருத்தாசலம் வந்த 2 பேர், மதுரையில் இருந்து பண்ருட்டி வந்த ஒருவர், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டையை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதியானது.
இதுதவிர சளி, காய்ச்சல் போன்ற தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 61 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலத்தை சேர்ந்த 56 வயது பெண், நல்லூரை சேர்ந்த 60 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் 68 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.