செய்திகள்
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை முடிக்க வழக்கு... அரசிடம் விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முழுமை பெறாததால், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த, கடந்த 2017-ம் ஆண்டு, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து, அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது. விசாரணை முழுமை பெறாததால், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், ஆணையத்தை முடிக்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை மூன்று மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும்படி, ஏன் உத்தரவிடக் கூடாது என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து, ஆறு வாரங்களில் விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.