செய்திகள்
பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. அறிவுரை
பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் அறிவுரை கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே காவல்துறை சார்பில் உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் 201 தனி வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் ஆலோசனைகளை வழங்கினார். அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்றனர். பின்னர் சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் கிருமிநாசினி, முககவசம் உள்ளிட்ட கொரோனா நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
அப்போது அவர் கூறும் போது:- சட்டத்தை நடைமுறைபடுத்தும் மிகப்பெரிய பணியினை நாம் செய்து வருகிறோம். மேலும் நாம் கனிவோடு பொதுமக்களிடம் நடந்துகொள்ள வேண்டும். நன்னடத்தை என்பது அவசியம் என்றார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு முரளிதரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வின், பால்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.