சீர்காழியில் 3 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.5000 அபராதம்
சீர்காழி:
கொரோனா தொற்று பாதிப்பு குறையாத 11 மாட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டமும் ஒன்றாக உள்ளது. ஆகையால் மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் வகை 1ல் உள்ள நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எந்த வித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே சீர்காழி பகுதியில் நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வி தலைமையில் பொறியாளர் தமயந்தி, மேலாளர் காதர்கான், பணிதள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது, நகரில் 3 திருமண மண்டபங்களில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி திருமணம் நடத்த அனுமதித்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த 3 திருமண மண்டபங்களுக்கும் தலா ரூ.5ஆயிரம் நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வி அபராதம் விதித்தார். விதிமுறைகளை மீறி திருமணமண்டபங்களில் திருமணம் நடத்திட அனுமதித்தால் மண்டபங்களுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தார்.