செய்திகள்
நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியர் தற்கொலை
பணி ஓய்வு பெற இருந்த நிலையில் நெய்வேலி என்எல்சி நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 25-வது வட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 60).
இவர் என்.எல்.சி. முதலாவது சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் சுந்தரமூர்த்தி வேலைக்கு சென்றார். என்.எல்.சி. முதலாவது சுரங்கத்தில் அவர் வேலைபார்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள மாடிக்கு செல்லும் படிகட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார். அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் சுந்தரமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தூக்கில் பிணமாக தொங்கிய சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட சுந்தரமூர்த்தி இன்றுடன் பணிமுடிந்து ஓய்வுபெற இருந்தது குறிப்பிடதக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.