செய்திகள்
உடலை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஆவுடையார்கோவில் அருகே இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டம்

Published On 2021-05-22 18:35 IST   |   Update On 2021-05-22 18:35:00 IST
ஆவுடையார்கோவில் அருகே இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆவுடையார்கோவில்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே உள்ள வீரமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் மெய்யர் (வயது 75). நேற்று வயது முதிர்வு காரணமாக இறந்த இவரது உடலை அடக்கம் செய்வதற்காக வீரமங்கலம் கிராமம் வழியாக எடுத்து சென்றனர்.

அப்போது, கிராமத்திற்குள் பிணத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று வீரமங்கலம் பகுதி மக்கள் வழிமறித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த காமராஜ்நகர் பகுதி மக்கள் நடுரோட்டில் பிணத்தை இறக்கி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமராஜ் நகரிலிருந்து வீரமங்கலம் கிராமத்துக்குள் செல்லாமல் ஆற்று பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்ல வேறு வழி இருக்கிறது. அந்த வழியாகத்தான் சடலத்தை முன்பு கொண்டு சென்றார்கள். சமீபகாலமாகத்தான் இந்த வழியாக கொண்டு செல்கிறார்கள் என வீரமங்கலம் கிராமமக்கள் கூறினர். அதற்கு காமராஜ் நகரமக்கள் இந்த சாலை அனைவருக்கும் பொதுவான சாலை தானே, இந்தவழியாக பிணத்தை கொண்டுசென்றால் என்ன என்று கேட்டனர். இதனால் 2 தரப்பினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடைஇடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறந்தாங்கி கோட்டாட்சியர் ஆனந்த் மோகன், அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மெய்யரின் உடல் மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.

Similar News