செய்திகள்
ஊரடங்கால் பூக்களை விற்பனை செய்ய முடியாததால் பூச்செடிகளை வெட்டிவிட்ட விவசாயிகள்
ஊரடங்கால் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் பூச்செடிகளை விவசாயிகள் வெட்டி விட்டு்ள்ளனர்.
வடகாடு:
வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, அனவயல், கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி, குளமங்கலம், மரமடக்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, காக்கரட்டான், சம்பங்கி, கனகாம்பரம், ரோஜா, அரளி, பிச்சி, சென்டி, கோழிக்கொண்டை போன்ற பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பூக்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர். ஒருசில விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள மல்லிகை, முல்லை, பிச்சி, சம்பங்கி போன்ற பூச்செடிகளை கவாத்து செய்தும், வெட்டி விட்டு வருகின்றனர்.
ஒருசிலர் பூக்களை பறிக்க ஆட்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாமல் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். பூக்கள் செடிகளிலேயே பூத்து குலுங்கி வீணாகியும் வருகிறது. மேலும் வெட்டி விடப்பட்ட பூச்செடிகள் மீண்டும் தளிர்விட்டு அடுத்த பருவத்தில் பூக்க தொடங்கும். இந்த பருவத்தில் பூக்கள் அதிக அளவில் பூத்தும் ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாமல் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.