பண்ருட்டியில் மதுபோதையில் மனைவியை குத்தி கொன்ற கணவர்
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). சிற்பியாக உள்ளார். இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஆறுமுகத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று இரவும் ஆறுமுகம் மது போதையில் வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்த அவரது மகளிடம் தகராறில் ஈடுபட்டார். இதைப்பார்த்த லட்சுமி, தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டார்.
இதில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து லட்சுமியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த லட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆறுமுகத்தின் மகள் கதறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.
அவர்களை கண்டதும் ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த லட்சுமியை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லட்சுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு லட்சுமி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத், இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.