கடலூர் மாவட்டத்தில் 3 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று
கடலூர்:
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் பொதுமக்களுக்கு முன்கள பணியாளர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்கள பணியாளர்கள் பலரும் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் 2 போலீசாருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 38 ஆயிரத்து 830 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 453 பேர் குணமடைந்துள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 400 பேர் பலியாகி உள்ளனர்.