வேலூரில் 2 நாட்களில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 17 பேர் பலி - மூச்சுத்திணறலால் மேலும் 4 பேர் பலி
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி, பென்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரி, சி.எம்.சி., நாராயணி ஆஸ்பத்திரி, நறுவீ ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 171 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் நேற்று முன்தினம் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 6 பேர் இறந்தனர். நேற்று இரவு மேலும் 4 பேர் பலியானார்கள். கடந்த 2 நாட்களில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 10 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோல அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறி இல்லாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் நேற்று முன்தினம் 4 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் நேற்று முன்தினம் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். 7 பேரும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
வேலூர் மாவட்டத்தில் தொற்று பரவல் ஒருபுறம் அதிகரிக்க மற்றொருபுறம் இறப்பும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:- வேலூரில் சிகிச்சை பெற்ற வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலியானதாக தகவல் எதுவும் வரவில்லை என்றனர்.