செய்திகள்
ஊட்டியில் நடந்த பந்தயத்தில் குதிரைகள் இலக்கை நோக்கி வேகமாக ஓடியதை காணலாம்

ஊட்டியில் குதிரை பந்தயம் தொடங்கியது

Published On 2021-04-15 10:16 IST   |   Update On 2021-04-15 10:16:00 IST
கொரோனா பரவல் காரணமாக குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பந்தயம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்து குதிரை பந்தயம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி ஊட்டியில் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நேற்று தொடங்கியது. தமிழ் புத்தாண்டு கோப்பைக்கான பந்தயம் உள்பட 7 பந்தயங்கள் நடைபெற்றன. பந்தயங்களில் பங்கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. இன்றும்(வியாழக்கிழமை) குதிரை பந்தயம் நடக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மைதானத்தின் நுழைவாயில் மூடப்பட்டு இருந்தது. அங்கு காவலாளிகள் தடுப்புகள் வைத்து இருந்தனர். தமிழக அரசு உத்தரவின்படி குதிரை பந்தயம் நடைபெறும் நாட்களில் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மைதானத்துக்கு வெளியே ஆங்காங்கே உயரமான இடங்களில் நின்றவாறு பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

மைதானத்துக்குள் கவுன்ட்டர்கள், புக்கிங் சென்டர் செயல்படவில்லை. 5 உயர் கோபுரங்களில் நவீன கேமராக்கள் மூலம் குதிரை பந்தயம் படம் பிடிக்கப்படுகிறது. இதனை சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட மைதானங்களில் இருந்து நிர்வாகத்தினர் ஆன்லைன் மூலம் நேரடியாக பார்க்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

பந்தயத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குதிரைகள் வந்து உள்ளன. குதிரை பந்தயம் நடக்கும் மைதானத்துக்குள் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News