செய்திகள்
கோப்புப்படம்

கடலூரில் மாவட்டத்தில் 175 பேருக்கு தொற்று

Published On 2021-04-15 02:54 GMT   |   Update On 2021-04-15 02:54 GMT
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 ஆயிரத்து 802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஆந்திரா, மத்திய பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், சென்னை, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கடலூர் மாவட்டத்துக்கு வந்த 12 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 3 பேருக்கும், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 95 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

பண்ருட்டியை சேர்ந்தவர் 42 வயது நபர். இவர் கொரோனா அறிகுறிகளுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புவனகிரியை சேர்ந்த 59 வயது முதியவரும், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்னும் 322 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் 18 இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News