செய்திகள்
கோப்புபடம்

குறிஞ்சிப்பாடி அருகே சேற்றில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2021-04-12 09:25 GMT   |   Update On 2021-04-12 09:25 GMT
குறிஞ்சிப்பாடி அருகே கிணற்றை தூர்வார முயன்றபோது சேற்றில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
குறிஞ்சிப்பாடி:

குறிஞ்சிப்பாடி ரெட்டியார் காலனி பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ். ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புற கிணற்றை தூர்வார முடிவு செய்தார். அதன்படி கிணற்றை தூர்வாரும் பணியில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிகளான முருகன் (வயது 50), கொளஞ்சி (48) ஆகியோர் ஈடுபட்டனர். இதில் கயிறு கட்டிக்கொண்டு முருகன் கிணற்றுக்குள்ளும், கொளஞ்சி நடுப்பகுதியிலும் நின்று கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றை தூர்வாரிக்கொண்டிருந்த போது, அதில் இருந்த சேற்றில் முருகன் சிக்கியதாக தெரிகிறது. இதைபார்த்த கொளஞ்சி உடனே கிணற்றில் இறங்கி, முருகனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் பலன் கிடைக்காமல் அவரும் சேற்றில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று அபயக்குரல் எழுப்பினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேற்றில் சிக்கிய முருகன், கொளஞ்சியை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொளஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News