செய்திகள்
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முககவசம் அணியாதவர்களிடம் ரூ.49 லட்சம் வசூல்
ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர் என இதுவரை முககவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.49 லட்சத்து 400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைபிடித்து, கட்டாயம் முககவசம் அணிந்தால் பரவலை தடுக்கலாம். இதை தொடர்ந்து முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முககவசம் அணியாமல் தொற்றை பரப்பும் வகையில் வெளியே வருகிறவர்களுக்கு பொதுசுகாதார சட்டத்தின்படி ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். நீலகிரியில் சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர், போலீசார், உள்ளாட்சித் துறையினர் என பல்வேறு துறையினர் இணைந்து முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர் என இதுவரை முககவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.49 லட்சத்து 400 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.