பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்து 2 வீடுகளை சூறையாடிய யானை- பொதுமக்கள் அச்சம்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா அட்டி பாண்டியார் அரசு தேயிலைத்தோட்டம், தேவாலா வாளவயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 2 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
யானை, மனித மோதல் ஏற்பட்டு உயிர்சேதம் ஏதேனும் ஏற்படுவதற்குள் யானைகளை அடந்த வனப் பகுதிக்கு விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பை சேதம் செய்தது அதனை தொடர்ந்து நேற்று பாண்டியார் அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ சரகம் எண் 4 பகுதியில் வசித்து வரும் டேன்டீ தொழிலாளி சதீஸ்குமார் என்பவரது வீட்டை உடைத்து சூறையாடியது. அதேபோல் அப்பகுதியில் மேலும் 2 வீடுகளின் கதவை உடைத்து சேதம் செய்துள்ளது. அப்பகுதிக்கு வந்த தேவாலா வனச்சரக வேட்டைத்தடுப்பு காவலர்கள் யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
யானைகள் மீண்டும் குடியிருப்பை தாக்குவதற்கு முயற்சித்ததோடு வனத்துறை வாகனத்தையும் ஆக் ரோசத்துடன் தாக்குவதற்கு முயற்சித்தது. அதனால் பரபரப்பு ஏற்பட்டது. யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.