செய்திகள்
கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: எலக்ட்ரீசியன் பலி
கீழையூர் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் தீனாஈஸ்வரன் (வயது 20). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டியை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திருப்பூண்டி அருகே சென்றபோது திருத்துறைப்பூண்டியில் இருந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள், தீனாஈஸ்வரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், தீனாஈஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தது திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த வீரையன் மகன் வீரபாண்டி (24) என்பது தெரியவந்தது.இந்த விபத்தில் வீரபாண்டிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.