செய்திகள்
மக்கள் அமைதியாக வாழ மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் - ஆற்காடு பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகன் பேச்சு
தமிழக மக்கள் அமைதியாக வாழ மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையவேண்டும் என்று ஆற்காடு தொகுதி பா.ம.க. வேட்பாளர் கே.எல்.இளவழகன் கூறினார்.
ஆற்காடு:
ஆற்காடு தொகுதி பா.ம.க. வேட்பாளர் கே.எல். இளவழகன் நேற்று திமிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட டி.புதூர், பின்டித்தாங்கல், மேல்நேத்தப்பாக்கம், அகரம், கலவைபுத்தூர், பின்னத்தாங்கல், வெல்லம்பி, குட்டியம், செங்கனாவரம், அத்தியானம் உள்ளிட்ட கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு அடித்தட்டு மக்களின் தேவைகளை அறிந்து அதன்படி செயல்படும் அரசாக உள்ளது. மக்கள் கேட்காமலேயே எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றியுள்ளார். தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,500, விவசாயத்துக்கு உடனடி இலவச மின் இணைப்பு, மும்முனை மின்சாரம், குடும்ப இலவச கேபிள் இணைப்பு, இலவச வாஷிங் மிஷின் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதனை செயல்படுத்தவும், தமிழக மக்கள் வறுமை இன்றி, அமைதியாக வாழ மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும். அதற்கு மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் இந்த தொகுதி மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது அ.தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் கலவை அப்துல்லா, திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார், கலவை பேரூராட்சி செயலாளர் சதீஷ், பா.ம.க. மாநில நிர்வாகி மற்றும் தொகுதி பொறுப்பாளர் எம்.கே.முரளி, மாவட்ட தலைவர் ஆறுமுகம், செயலாளர் சண்முகம், பொருளாளர் அமுதா, ஒன்றிய நிர்வாகிகள் விக்கிரமன், பெருமாள், சுரேஷ், எம். சாரதி, பா.ஜ.க. பொறுப்பாளர் மனோகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.