செய்திகள்
கோப்பு படம்.

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-01 12:47 GMT   |   Update On 2021-04-01 12:47 GMT
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வேலூர்:

தமிழகத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து அரசு உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

கடந்த மாத தொடக்கத்தில் 10-க்கும் குறைவான நபர்களுக்கே தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் 43 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய பரிசோதனையில் 52 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், 10 பேர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

52 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News