செய்திகள்
மணி

சம்பள பணத்தை பிரிப்பதில் தகராறு- பழங்குடியின இசை கலைஞர் கொலை

Published On 2021-03-19 15:33 IST   |   Update On 2021-03-19 15:33:00 IST
சம்பள பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மணி அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனையில் உள்ள மந்தரை கிராமத்தை சேர்ந்தவர் மணி(வயது 66). பழங்குடியின இசை கலைஞர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மணி நேற்று முன்தினம் காலையில் அதே பகுதியை சேர்ந்த குழுவினருடன் அரவேனு பகுதியில் இசை நிகழ்ச்சி நடத்த சென்றார். பின்னர் அங்கிருந்து மாலையில் அவர்கள் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். மேலும் மது குடித்து இருந்தனர்.

இதற்கிடையில் இசை நிகழ்ச்சியில் கிடைத்த பணத்தை பிரித்து கொள்வதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்கள் சமாதானம் அடைந்து, தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

ஆனால் மணி அவரது வீட்டுக்கு வரவில்லை. அவரை உறவினர்கள் தேடி வந்தனர். அப்போது வீட்டின் அருகில் உள்ள காபி தோட்டத்தில் உடலில் பலத்த காயங்களுடன் மணி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சம்பள பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மணி அடித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து 2 தனிப்படை அமைத்து, தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News