செய்திகள்
ஊட்டியில் முகக்கவசம் அணியாத நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது எடுத்த படம்.

கடந்த 5 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.16 ஆயிரம் அபராதம் வசூல்

Published On 2021-03-17 09:30 IST   |   Update On 2021-03-17 09:30:00 IST
ஊட்டி நகராட்சியில் கடந்த 5 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் ஊட்டி நகராட்சியில் சுகாதார அதிகாரிகள் தனிக்குழு அமைத்து சோதனை செய்து வருகின்றனர். அவர்கள் ஊட்டி சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, நகராட்சி மார்க்கெட், மத்திய பஸ் நிலையம், சுற்றுலா தலங்கள் உள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா, வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சரியான விதத்தில் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்று கண்காணித்து அபராதம் விதித்தனர். கடந்த 5 நாட்களில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் நின்று இருந்தால் சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Similar News