விருத்தாசலம் அருகே காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 28 லட்சம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி
விருத்தாசலம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று அதிகாலை விருத்தாசலம் அருகே வேப்பூர் கூட்டு ரோடு சேலம்-விருத்தாசலம் சாலையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் வெள்ளி கொலுசு, மெட்டி, வளையல் என 1,232 வெள்ளி பொருட்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 28 லட்சம் ஆகும்.
விசாரணையில் இந்த பொருட்களை சேலம் அருகே உள்ள செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவர் கும்பகோணத்துக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். ஆனால் வெள்ளி பொருட்களுக்குரிய எந்த ஆவணம் இல்லை.
எனவே வெள்ளிபொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் விருத்தாசலம் சப்- கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் சிவக்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.