செய்திகள்
தீப்பற்றி எரிந்த வைக்கோல்

தீப்பற்றி எரிந்த வைக்கோலை சாலையில் இறக்கிவிட்டு சென்ற டிரைவர்

Published On 2021-03-02 17:51 GMT   |   Update On 2021-03-02 17:51 GMT
தீப்பற்றிய வைக்கோலை டிரைவர் சாலையில் இறக்கிவிட்டு அலட்சியமாக சென்றது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் செல்லும் சாலையில் ஒரு டிராக்டரில் நேற்று மதியம் வைக்கோல் ஏற்றி வரப்பட்டது. நால்ரோடு பகுதியில் நடுவலூருக்கு மிக அருகில் சாலையில் அந்த டிராக்டர் வந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக வைக்கோலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. அந்த வழியாக பின்னால் வந்த வாகன ஓட்டிகள், டிராக்டர் டிரைவரிடம் வைக்கோல் தீப்பற்றி எரிவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், டிராக்டரை உடனடியாக நிறுத்தி, வைக்கோல் பாரத்தை டிராக்டரில் இருந்து சாலையில் இறக்கிவிட்டு டிராக்டரோடு சென்றுவிட்டார். இந்நிலையில் சாலையில் இறக்கப்பட்ட வைக்கோல் மளமளவென எரிந்து தீ நாலாபுறமும் பரவியது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அதை கண்டு, ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் தீயை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி தா.பழூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வைக்கோல் எரிந்த சாலையின் அருகே நிலக்கடலை வயல்கள் மட்டுமே இருந்ததாலும், அருகில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததாலும் காற்றில் பறந்த தீப்பொறிகளால் அதிர்ஷ்டவமாக பெரும் விபத்து ஏற்படவில்லை. டிராக்டரில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தீப்பற்றிய வைக்கோலை டிரைவர் சாலையில் இறக்கிவிட்டு அலட்சியமாக சென்றது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News