செய்திகள்
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வேலூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலூர்:
வேலூர் கலாஸ்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் திவ்யா கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் மனவேதனையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திவ்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திவ்யா திருமணமாகி 3 ஆண்டுகளில் உயிரிழந்ததால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.