செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட டீ-சர்ட், சில்வர் பாத்திரம்

கடலூர் அருகே டீ-சர்ட், சில்வர் பாத்திரம் பறிமுதல் - தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நடவடிக்கை

Published On 2021-03-01 18:23 GMT   |   Update On 2021-03-01 18:23 GMT
கடலூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள டீ-சர்ட், சில்வர் பாத்திரத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கடலூர்:

தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான தேதியை அறிவித்த உடனே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் செய்து வருகிறது.

இது தவிர பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவை அமைத்து, மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.

அதன்படி இந்த குழுவினர் தீவிர சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். நேற்று நில எடுப்பு தனி தாசில்தார் விஜயா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு வில்வேந்திரன், போலீஸ்காரர் சின்ராஜ் ஆகியோர் அடங்கிய நிலையான கண்காணிப்பு குழுவினர் கடலூர் அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த மினி லாரியை கண்காணிப்பு குழுவினர் மறித்து சோதனை செய்தனர். அதில், 3 மூட்டைகளில் டீ-சர்ட்டும், மற்றொரு 3 மூட்டைகளில் சில்வர் பாத்திரமும் இருந்தது. டீ- சர்ட்டில் முன்பக்கம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உருவமும், டார்ச் லைட் சின்னமும் இடம் பெற்றிருந்தது. பின் பக்கம் புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சோமநாதன் என்பவரின் படமும், டார்ச் லைட் சின்னமும் பொறிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து இதை ஏற்றி வந்த டிரைவரான லாஸ்பேட்டையை சேர்ந்த விஜயகுமாரிடம் கண்காணிப்பு குழுவினர் விசாரித்த போது, அதை அவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்திற்கு ஏற்றி செல்வதாக தெரிவித்தார். மேலும் தனக்கு வாடகையாக ரூ.700 தருவதாக பேசி சம்பந்தப்பட்ட நபர் பொருட்களை எடுத்து வரச்சொன்னதாகவும், ஆனால் அதில் உள்ளே என்ன பொருட்கள் இருந்தது என்று தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த குழுவினர், அதை கடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பலராமனிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது பற்றி தொடர்ந்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தான் இந்த பொருட்கள் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News