செய்திகள்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுவதை காணலாம்

கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கம்- கிராமப்புற பயணிகள் தவிப்பு

Published On 2021-02-26 10:00 GMT   |   Update On 2021-02-26 10:00 GMT
கடலூர், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் கிராமப்புற பயணிகள் தவித்தனர்.
கடலூர்:

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

அதன்படி கடலூர் மாவட்டத்திலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் 12 அரசு பஸ் பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து 608 பஸ்கள் இயக்கப்படுகிறது.

அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் காரணமாக கிராம பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் தவித்தனர். என்றாலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் அந்தந்த பணிமனைகளின் வாசல் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று விடிய விடிய பணிமனைகளில் வேலைகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. அரசு பஸ் போக்குவரத்து கழக ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லாமல் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வழக்கமாக காலை 8 மணி அளவில் இந்த பணிமனைகளில் இருந்து 263 பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்றும் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் குறைந்த அளவு வந்தது. இதனால் பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியூருக்கு செல்லக்கூடிய பயணிகள் இன்றும் தவித்தனர்.

இந்த போராட்டத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பஸ் பணிமனைகள் முன்பு சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கடலூரில் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்பட 13 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து 600 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சுமார் 4,500 அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் கள் பணியாற்றி வருகிறார்கள். நேற்று காலை முதல் தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை.

இன்றும் 2-வது நாளாக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் போராட்டம் நீடித்தது. இதனால் மாவட்டம் முழுவதும் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் கிராமப்புற பயணிகள் தவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்தது. இதனால் பயணிகள் வெளியூருக்கு செல்லமுடியாமல் தவித்தனர்.

Tags:    

Similar News