செய்திகள்
கோப்புபடம்

தா.பழூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடியவர் கைது

Published On 2021-02-24 19:44 IST   |   Update On 2021-02-24 19:44:00 IST
தா.பழூர் அருகே உள்ள கிராமத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள அடிக்காமலை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அய்யனார், மதுரைவீரன் கோவில் உள்ளது. கடந்த 20-ந் தேதி கோவில் அர்ச்சகர் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி செல்லதுரை, தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

இந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போலீசார் மதனத்தூர் போலீஸ் சோதனைச் சாவடி அருகே சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் தெற்குத் தெருவை சேர்ந்த வீராசாமி (32) என்பதும், அவர் தான் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.2 ஆயிரத்தை திருடியதும் தெரிய வந்தது. அதன்பேரில், அவரை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News