செய்திகள்
விருத்தாசலத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் வட்ட மாட்டுவண்டி விவசாய தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாட்டுவண்டி மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நடந்தது. இதற்கு வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஏதுவாக அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும், மூடப்பட்ட அனைத்து மணல் குவாரிகளையும் உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஜெயகுரு, தனசேகர், வைத்தியநாதன், மாயவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து, தங்களது கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்து விட்டு சென்றனர்.