செய்திகள்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2021-02-09 06:45 IST   |   Update On 2021-02-09 06:45:00 IST
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த ஹாரூன் ரசித் (வயது 22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது, அவர் அணிந்து இருந்த ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது மனாஸ் (25) என்பவரது உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள 660 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 10 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக முகமது மனாஸ், ஹாரூன் ரசித் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Similar News