செய்திகள்
445 ஊராட்சிகளிலும் நெல் கொள்முதல் நிலையம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி தலைமையில் சிவகங்கையில் நடந்தது. கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ், மாவட்ட செயலாளர் வீரபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தண்டியப்பன், முத்துராமலிங்க பூபதி, கருப்புசாமி, ஆறுமுகம், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் வைகை பாசன கண்மாய்கள் பெரும்பகுதி நிரம்பாத நிலையில் உள்ளது. எனவே கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும். காரைக்குடி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்.
ெதாடர் மழை காரணமாக சாலைக்கிராமம் பகுதியில் மிளகாய் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருப்புவனம் தாலுகாவில் முக்குடி, செங்குளம் உள்ளிட்ட 9 கிராமங்களில் வெங்காயம் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டது. பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் பரவலாக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. விளைந்த நெல்களை கொள்முதல் செய்வதற்கு 445 ஊராட்சிகளிலும் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.