செய்திகள்
சிதம்பரத்தில் நிவாரணம் கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
சிதம்பரத்தில் நிவாரணம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம், கீரப்பாளையம் ஒன்றியம், பரங்கிப்பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். பின்னர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கட்சியினர் மனு கொடுத்தனர்.
இதேபோல் மாநில குழு உறுப்பினர் மூசா தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்திற்கு சென்று நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர். இதில் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஆட்டோ முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திட்டக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பர்ட்டத்திற்கு வட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க வட்ட செயலாளர் மகாலிங்கம், விவசாய சங்க துணை செயலாளர் ராஜேந்திரன், சுந்தரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனு தாசில்தார் சையத் அபுதாஹிரிடம் வழங்கப்பட்டது.