செய்திகள்
வேப்பூர் அருகே கார்- டிராக்டர் மோதல்: தக்காளி வியாபாரி பலி
வேப்பூர் அருகே கார் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேப்பூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பீமன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கட்ரமணன்(வயது 35). கும்பகோணத்தில் தக்காளி மண்டி நடத்தி வந்தார். இவர் வியாபாரம் தொடர்பாக தனது நண்பரான, கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் ஒரு காரில் சேலம் சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை வெங்கட்ரமணன் ஓட்டினார். சதீஷ்குமார் காரில் பின்இருக்கையில் படுத்தபடி பயணம் செய்து கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு விருத்தாசலம்-சேலம் சாலையில் தனியார் பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த டிராக்டரும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தக்காளி வியாபாரி வெங்கட்ரமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். டிராக்டர் டிரைவர் தப்பிஓடிவிட்டார்.
விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான வெங்கட்ரமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.