செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூரில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உள்பட 14 பேருக்கு கொரோனா

Published On 2020-12-24 12:56 IST   |   Update On 2020-12-24 12:56:00 IST
கடலூர் மாவட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உள்பட 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் கடலூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமாருக்கும் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

அதோடு அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இது தவிர பீகார், கேரளாவில் இருந்து என்.எல்.சி. வந்த 3 பேருக்கும், கடலூரை சேர்ந்த பிரசவித்த தாய், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள கடலூரை சேர்ந்த நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 554 ஆக உயர்ந்தது.

நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 15 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். கொரோனா பாதித்த 69 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 32 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். .

Similar News