செய்திகள்
தீ கொழுந்துவிட்டு எரிந்ததையும், தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்ததையும் படத்தில் காணலாம்.

பவானிசாகரில் மீன் வளர்ச்சி குடோனில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின - பொருட்கள் எரிந்து நாசம்

Published On 2020-12-07 08:00 IST   |   Update On 2020-12-07 08:00:00 IST
பவானிசாகர் மீன் வளர்ச்சி குடோனில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
பவானிசாகர்:

பவானிசாகரில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக அலுவலக வளாகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பவானிசாகர் அணையில் ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களுக்காக கடந்த ஆண்டு புதிய அலுவலக கட்டிடம் துறை சார்பில் கட்டி கொடுக்கப்பட்டது.

இதனால் மீன் வளர்ச்சி கழக அலுவலக வளாகம் இருந்த பழைய கட்டிடம் குடோனாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் பவானிசாகர் அணையில் மீன் பிடிப்பதற்காக டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களின் கியாஸ் சிலிண்டர்கள், தெர்மோகோல் பெட்டிகள், மூன்று இருசக்கர வாகனங்கள், மற்றும் படகின் உதிரிபாகங்கள், மீன் வளர்ச்சி கழக அலுவலகத்தின் பழைய பர்னிச்சர்கள் போட்டு வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் இந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த அலுவலக வளாகத்தில் 12-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் இருந்த நிலையில், அதில் உள்ள 4 சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த 4 கியாஸ் சிலிண்டர்களும் வெடித்ததால் குடோன் முழுவதும் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் குடோன் முழுவதும் எரிந்து அதில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம் ஆனது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News