செய்திகள்
திருட்டு சம்பவம் நடைபெற்ற செல்போன் கடையில் போலீசார் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

கோட்டைப்பட்டினத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு

Published On 2020-12-03 14:01 GMT   |   Update On 2020-12-03 14:01 GMT
கோட்டைப்பட்டினத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோட்டைப்பட்டினம்:

கோட்டைப்பட்டினம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் உமர். இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம்போல, நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருந்தது.

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு, உமர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

மேலும், கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது மர்ம நபர்கள் 2 பேர் செல்போன்களை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News