செய்திகள்
குளிர் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
கொரோனா தடுப்பில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்வதால் குளிர் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை:
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத்திட்ட பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் விஜய பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவுத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஒரு விவசாயியாக உணர்ந்து காவிரி -வைகை-குண்டாறு இணைப் புத்திட்டத்தை ரூ.7,677 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார். இதன் முதற்கட்ட பணிகளுக்காக நிலம் கைய கப்படுத்துவதற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்த்து ரூ.333 கோடி மதிப்பீட்டில் டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்தில் டெண்டர் பணிகள் முடிவுற்று ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
உலக நாடுகள் மற்றும் நமது அண்டை மாநிலங்களில் கொரோனா 2-ம் அலையின் போது கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் தமிழகம் கொரோனா பாதிப்பை தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்தாலும் தமிழகத்தில் தினமும் 70,000 முதல் 80,000 வரை ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு 120 என்ற நிலையில் இருந்த இறப்பு விகிதத்தை தற்போது 20-க் கும் கீழாக இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன் அரசு மருத்துவமனைகளில் ஓரிரு இறப்பு என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதத்தை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக கொண்டு வருவதே தமிழக அரசின் குறிக்கோளாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் இந்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மற்றும் மத்திய அரசு பாராட்டும் வகையில் தமிழகத்தின் செயல்பாடு அமைந்துள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்கிறது.
தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இனிவரும் குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் என்ற நிபுணர்களின் எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இதனால் கொரோனா தொற்று இல்லாத நிலையை அடைய வழிவகை ஏற்படும். எனவே அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
தமிழகத்தில் தற்போது ஒரு நாளைக்கு 2,000-த்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. எனினும் தினமும் 2,318 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இம்முகாமில் 13,000 முதல் 15,000 எண்ணிக்கையில் ஆர்டிபிசிஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் பயனாக தமிழகத்தில் இதுவரை 5 லட்சம் எண்ணிக்கையில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.